எங்கள் ஊர் அம்மன் கோவிலில் வழிபடச் சென்றேன். கோவில் பூசாரி சாதிச்சான்றிதழ் கேட்டார்.
நான் இந்து என்றேன். அது செல்லுபடியாகாத வெற்றுச் சொல் இங்கே சாதியே கடவுளின் சன்னதிக்கு செல்லும் கடவுட் சீட்டு என்றார். சாதி நந்தியாய் சாமியிடமிருந்து எனை மறைத்து நின்றார்.
அரசிடம் சென்று முறையிட்டேன். நடுநிலை நாயகர்கள் நமக்கெதற்கு வம்பென்று யாரும் நுழையா வண்ணம் கோவில் கதவுகளை இழுத்துச் சாத்தி அரசாங்க முத்திரை பதித்து சென்றார்கள். அவர்களின் சமூகநீதி குடைசாய்ந்து கிடந்தது.
மக்கள் மன்றம் முன் சென்றேன் அது காந்தியின் குரங்கு பொம்மைகளாய் கண்காது மூக்கு பொத்தி மெளனமாய் நின்றது. தமிழ்த் தேசியங்களோ ஈழம் மலரட்டும் எழுந்து வருகிறோம் என்றார்கள்.
இந்துக்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த சங்கிகளிடம் சென்றேன். அவர்கள் கருவறையில் குழந்தைகளை கற்பழிக்கும் மாபாதகச் செயல்களில் மும்முரமாய் இருந்தனர். பயந்தோடி வந்துவிட்டேன். பூணூல் மார்பன்களின் ஆசி பெற்ற தீக்கொளுத்திகள் வழக்கம்போல் சுத்தமான சாதி கொழுப்பு நெய்யால் ஊற்றப்பட்ட அக்கினிச்சட்டி தூக்கி ஆடிவந்தார்கள்.
சாமியாடி நின்ற சாதிப் பெண்களுக்கு தீண்டக்கூடாத சாதிகளின் பட்டியல் நன்கு தெரிந்திருந்தது. சாபம் விட்டுக்கொண்டே அருள் வந்ததாய் நாடகமாடினார்கள். எல்லாம் வேடிக்கை பார்த்தபடி ஏதொன்றும் செய்ய வழியற்று கல்லாலான பராசக்தி கவலையற்று அருள்பாலித்து கொண்டிருந்தாள்.
பராசக்தியின் நிலை பரிதாபகரமாய் இருந்தது சக்தியற்ற சாமிகளை கும்பிடுவதைவிட ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கலாம் என பொடிநடையாய் நூலகம் கிளம்பினேன்.
பாரதியின் பாஞ்சாலி சபதம் புத்தகம் எனைப் பார்த்து சிரித்தது அதில் பட்டியலின மக்களின் தன்மானத்தை துகிலுரிந்து கொண்டிருந்தாள் நவீன திரெளபதி காக்க வேண்டிய கண்ணபிரானோ மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீரை சுவைத்துக் கொண்டிருந்தார்...